Monday, June 23, 2014

இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன ?




ஸ்த்ரேலியாவுல‌ இருக்கற சொக்கன் சுப்ரமணியன் அபுதாபியில இருக்கற நம்ம கில்லர்ஜீயை உசுப்பிவிட்டு அவரு, பிரான்ஸ் ஈபில் டவருக்கு கீழ தேமேன்னு நின்னு எதையோ கிறுக்கிக்கிட்டிருந்த‌  என்னை இதுல மாட்டி, சாரி அவர்  பாஷையில கோர்த்துவிட்டு...நியாயமாரே... ஏன் ? ஏன்ங்கறேன் ?!... சென்னை விமான நிலையத்துல ஒரு நாளைக்கு சந்திக்காமலா போயிடுவோம் ? அப்ப நாட்டாமையை சொம்போட சேர்த்து தூக்கிடுவோம்ல !


மேட்டர் ஒண்ணுமில்ல மக்களே ! ஒரு பத்து கேள்விகளுக்கு நான் பதில் சொல்லனுமாம்... யான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்ன்னு நான் ஒரு பத்துபேரை இதுல கோர்த்துவேற‌ விடனும் ! சரி, சரி, ஆனந்த விகடன்லேருந்து பேட்டி காண விரும்பற அளவுக்கு நாம ஒண்ணும் பவர் ஸ்டார் கிடையாது ! கில்லர்ஜீ பேட்டியே போதும் !


படிக்க சகிக்காதுதான் என்றாலும் அன்பர்கள் இறுதிவரை படிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்... இறுதியில் அவர்களின் பெயர் பட்டியலில் இருக்ககூடிய வாய்ப்பு உள்ளதால் !




1. உங்களுடைய நூறாவது பிறந்த நாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள் ?
குடும்பத்தினர்கள் மற்றும் நண்பர்களுடன் ( வளைப்பூ நண்பர்களுக்கு நிச்சயம் முன்னுரிமை  உண்டு ! ).., முடிந்தால் ஓடிப்பிடித்து விளையாடி கொண்டாட ஆசை !


2. என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் ?


கற்றுக்கொள்வதற்கு முன்னால் இந்த வாழ்க்கை ஓட்டம் எனக்கு என்ன கற்றுத்தர முயற்சித்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன் !


3. கடைசியாக சிரித்தது எப்போது ? எதற்காக ?


இந்த பதிவை எழுத தொடங்குவதற்கு முன்னால்...


நண்பர் கில்லர்ஜி  இந்த சுழற்சி பதிவில் என்னை சேர்த்திருப்பதாக அவர் எனக்கு அனுப்பிய கமெண்ட்டை  படித்தபோது  ! அதை அப்படியே கீழே கொடுத்துள்ளேன்...


" நண்பா, உங்களை ஒருமேட்டரில் கோர்த்து விட்டு இருக்கிறேன்... "


அப்பாடா... மேட்டர், கோர்த்துவிட்டிருக்கிறேன்னுல்லாம் நீங்க பீடிகை போட்டதை படித்ததும் ஏதோ மோகனாவின் மோகினியாட்டம், மோகனின் மோகமுள் மாதிரி எதுகை மோனையா சாமானியனின் சல்லாபங்கள்ன்னு பதிவு போட்டுட்டீங்களோன்னு பயந்துட்டேன் ஜீ !


குட்டி, புட்டி மாதிரி மேட்டர் ( இது தமிழ் வார்த்தை இல்லன்னாலும் ! ), கோர்த்துவிடறது வார்த்தைக்கெல்லாம் எத்தனை அர்த்தமிருக்கு பாருங்க !


4. 24 மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன ?


இனிமேல் பழங்கால வாழ்க்கைக்கு திரும்புவோம் என மக்களுக்கு பிரச்சாரம் செய்வதோடு தாமஸ் ஆல்வா எடிசன் என்றொரு மனிதரை அனைவரும் உடனடியாக மறக்க வேண்டும் என கோரிக்கை வைப்பேன் !


( பதில் உபயம் : கில்லர்ஜீ. ( இந்த பதிலுக்கான அனைத்து உலக உரிமைகளும் அவருக்கே சொந்தமானது ! )


இத்துடன் நான் சேர்க்க நினைப்பது...


மின்சாரம் இல்லாத காரணத்தால் பிளேடு, ஜல்லியடி பதிவுகளை வளைப்பூவில் பிரசுரிக்க முடியாத வலைப்பூ நண்பர்களை கூட்டி சங்கம் ஆரம்பித்து இயற்கை விவசாயம் செய்வேன்  ! ஒருவர் வெட்டிய பாத்தியை பற்றி மற்றொருவர் " லைக் " போடும் வசதியுடன் !


5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் நீங்கள் அவர்களுக்கு சொல்ல விரும்புவது என்ன ?


உங்களின் பிரச்சனைகள் அனைத்தையும் நான்கு சுவற்றுக்குள், உங்களுக்குள் பேசி தீர்த்து கொள்ளுங்கள். ஒரு ஜோடியின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் மூன்றாவது நபரின் பெயர்தான் பிரச்சனை ! உங்கள் பிரச்சனை மற்றவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தி மட்டுமே என்பதை மறந்துவிடாதீர்கள்.


பெண்ணியம், ஆணியம் போன்ற பட்டிமன்ற தலைப்புகளையெல்லாம் வாழ்க்கைக்குள் நுழைத்து குழம்பாதீர்கள் ! இல்லறம் என்பது விட்டுகொடுத்தல்... ஈகோ அறுத்தல் !


6. உலகத்தில் உள்ள பிரச்சனைகளில் ஒன்றை உங்களால் தீர்க்க முடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள் ?


பட்டினி சாவு !


" தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " என முழங்கிய பாரதியின் புத்த‌கங்கள் அலமாரியை அலங்கரிக்க, ஊர் மொத்தமும் எலும்பும் தோலுமாய் சிறுக சிறுக செத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்க பஞ்ச காட்சியை தொலைக்காட்சியில் பார்த்து உச் கொட்டியபடி பிட்சா, பர்கரை விழுங்கி, கோக் குடித்து ஏப்பம் விடும் நாகரீக மனித குணம் ... மானுட அவமானம் !


7. நீங்கள் யாரிடம் அட்வவைஸ் கேட்பீர்கள் ?

பிரச்சனையை பொறுத்து நெருங்கியவர்களிடம் கலந்தாலோசித்தாலும் இறுதி முடிவு மிஸ்ட்டர் மனசாட்சி தீர்மானிப்பதுதான் !


8. உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள் ?


தவறானவர்களால்தான் " தவறான " தகவலை பரப்ப முடியும் ! என்னை பற்றி எனக்கும், என்னை நேசிப்பவர்களுக்கும் நன்றாகவே தெரியும் ! ஆகையால்... மெளனம் என்னும் மிக வலிமையான ஆயுதத்தை பயன்படுத்துவேன் !


9. உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?


... அந்த இழப்பின் வலியை அனுபவித்து, வடுவை சுமப்பவன் என்ற முறையில், வாழும் காலம் முழுவதும் இணந்து வருவாள் என்ற நம்பிக்கையுடன் கைப்பிடித்தவளை வாழ்வின் ஆரம்பத்திலேயே இழக்கும் நிலை என் நண்பர்களுக்கு மட்டுமல்ல, யாருக்கும் வரவேண்டாம் என இறைவனை பிரார்த்தித்துகொண்டு...


உன் குழந்தைகளுக்கு தாயுமானவனாக இரு ! இனி வாழ்க்கையில் நீ எடுக்கும் எந்த முடிவும் உன் குழந்தைகளின் நல்வாழ்க்கைக்கு சாதகமானதாகவே இருக்க வேண்டும் ! உன் குழந்தைகளை நீ நடத்தும்விதம்தான் நீ உன் மனைவியை எப்படி நேசித்தாய் என்பதை சொல்லும்.


இழப்பை பொறுத்தவரை...

இதுமட்டுமல்ல...
எதுவும் கடந்துபோகும் !
மனவெளியில்
அதன் ஞாபக துகள்களை
நிரந்தரமாய் விட்டுவிட்டு !!


10. உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள் ?


வாசிப்பு... மற்றும் எழுத்து !


இந்த வாய்ப்பை எனக்களித்த நண்பர் கில்லர்ஜீக்கு நன்றி ( மெய்யாலுங்க... காமெடி கீமெடி பண்ணல ! )


இனி யான் பெற்ற துன்பத்தை பகிர்ந்துகொள்ளப்போகும் என் வலைநண்பர்கள்...


கிங் விஸ்வா - tcuintamil.blogspot.fr
கார்த்திக் சோமலிங்கா - www.bladepedia.com
காரிகன் - kaarigan-vaarththaiviruppam.blogspot.fr
அமுதவன் - amudhavan.blogspot.fr
மது எஸ் - www.malartharu.org
அருணா செல்வம் - arouna-selvame.blogspot.com
ஊமைக்கனவுகள் - oomaikkanavugal.blogspot.fr
ஸ்கூல்பையன் - www.schoolpaiyan.com
வாலிமீகி தேவகோட்டை - valmeegi.blogspot.com
முட்டா நைனா - muttanina.blogspot.com


பின்குறிப்பு : இந்த பத்து பேரில் பதிலளிக்கும் முதல் மூன்று பேருக்கு, எனது சாமானியனின் கிறுக்கல்கள் முதல் பாகம் புத்தகம் இனாமாக அனுப்பிவைக்கப்படும். ( நான் இப்படியே எழுதிகொண்டிருந்து, மக்கள் தாமஸ் ஆல்வா எடிசனை மறக்கும் சூழ்நிலையும் ஏற்படாதிருந்தால் இந்த புத்தகம் 2020ல் வெளிவரும் என்பதை தெரிவித்துகொண்டு, புத்தகத்தை பெற சுய விலாசமிட்ட பெரிய கவருடன், பிரான்சிலிருந்து உங்கள் முகவரிக்கு அனுப்ப தேவைப்படும் தொகையையும் தாங்கள் அனுப்பவேண்டும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் !!! )

Sunday, June 15, 2014

முற்பகல் செய்யின்... ( சிறுகதை )

பிரபல ஐந்துநட்சத்திர ‍ஹோட்டல் ஒன்றின் அறை...


" கொண்டாந்துட்டீங்கல்ல...நம்ம வாக்கு சுத்தம்... என்னால முடியும்ங்கற காரியத்துக்குதான் ஒத்துக்குவேன் ! நமக்கு... கையில காசு... ம்ம்ம்... டேய் அப்புறம் என்னா ?! "


" ...ம்ம்ம்... வாயில தோச தலைவரே ! "


சோடாவில் கலந்த விஸ்கியை விழுங்கியபடி இழுத்த‌ அமைச்சரின் பேச்சுக்கு எடுத்துகொடுத்தான் அவருக்கு பக்கத்தில் நின்றிருந்த அந்தரங்க தொண்டரடிபொடி !


" இதுல நீங்க கேட்ட ஒரு கோடி இருக்கு சார் ! "


எதிரிலிருந்த கோட்சூட் மனிதர் தயக்கமாய் சூட்கேஸை நீட்டினார் !



" ம்ஹும்... அதை நான் தொட மாட்டேன்... கொடுக்கற மாதிரி கொடுத்துட்டு படம் புடிச்சிட்டா... "


போதையிலும் புத்திசாலித்தனமாக (!) அமைச்சர் பேச, விழித்தார் கோட்சூட் !


" ஐயா வாங்கமாட்டாரு... நான் வாங்குவேன்ல... ! "


பாய்ந்து பெட்டியை பிடுங்காத குறையாக வாங்கிய தொண்டரடிபொடியிடமிருந்து வீசிய பட்டை வாடைக்கு முகம் திருப்பிகொண்டார் கோட்சூட் !


" ஐயா... நீங்க மத்தவங்க மாதிரியா ? படம் புடிக்கறவன் கொடலை உருவிட மாட்டோம் ?! " 


கை உயர்த்தி சொறிந்து கொள்வது போன்ற பாவனையில் இடுப்பு வேட்டியில் சொருகியிருந்த பிச்சுவாவை தொட்டுக்காட்டியபடி தொண்டரடிபொடி உறும, ஏஸியை மீறி கோட்சூட்டின் முகத்தில் வியர்வை ஊற்று !


" சார் மெர்ஸலாகிட்டாபோல... சும்மா தமாசுக்கு சார் ! "


" அப்ப நான் கிளம்பறேங்க ! காண்ட்ராக்ட் கிடைச்சதும் மிச்சத்தை செட்டில் பண்ணிடறேன்... "



தொண்டரடிபொடியின் தமாசுக்கு அமைச்சரும் பெரிதாய் சிரிக்க, அவசரமாய் கிளம்பினார் கோட்சூட் !


" டேய்... சாரை வாசலாண்ட விட்டுட்டு வா... "


"லைவரே... யாரோ ஒரு சின்ன பொண்ணு உங்களாண்ட பேசனும்னு டார்ச்சர் கொடுக்குது தலைவரே.... "


" அது யாருடா ? நான் இங்க இருக்கறது நம்ம கட்சிகாரனுங்களுக்கே தெரியாதே... "


கோட்சூட்டை வழியனுப்பிவிட்டு வந்த தொண்டரடிபொடி சொல்ல சற்றே உஷாரானார் அமைச்சர் !


" இல்லீங்க தலைவரே நல்லா மிரட்டி உருட்டி விசாரிச்சிட்டேன்... தப்பா தெரியல... நீங்க கார்லேருந்து இறங்குனதை பாத்திருக்கு... இளசு தலைவரே... இருபது இருபத்திரெண்டுதான் இருக்கும்... சும்மா சினிமா ஸ்டாராட்டம் இருக்கு தலைவரே ! "


" எங்கடா ? "


தலைவரின் சபலம் விழிக்க தொடங்கியது !


" கெஞ்சிக்கினே என் பின்னாடியே ரூம் வாசல் வரைக்கும் வந்துடிச்சி தலைவரே... தோ கூப்பிடறேன் ! "


" ணக்கம் சார் ! "


அலைபாயும் கூந்தலும், டைட் டீ ஷர்ட்,  ஜீன்சுமாய் அறைக்குள் நுழைந்த இளம் பெண்ணை கண்டதும் போதையில் இடுங்கியிருந்த அமைச்சரின் கண்கள் அகல விரிந்தன !


" ‍ஹய்யோ... நான் உங்க பேன் சார்... நீங்க செஞ்ச நல்ல காரியங்களையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கேன் சார்... யூ ஆர் ரியலி கிரேட் சார் ! "


ஏதோ சினிமா நடிகரிடம் பேசுவதை போல அவள் வழிகிறாள் என புரிந்தாலும் அது அமைச்சருக்கு பிடித்திருந்தது ! அவள் கைகள் உயர்த்தியபோது குட்டை டீ ஷர்ட் விலகி தெரிந்த சிவந்த சின்ன இடுப்பு இன்னும் பிடித்திருந்தது !


" ம்ம்ம்... சொல்லும்மா என்ன வேணும் ? "


" அது வந்து... சார் ! இந்த ஆளை கொஞ்சம் வெளிய அனுப்புங்க சார் ! மீசையும் தொப்பையுமா... ஐயே ! "


சட்டென அருகில் வந்து கிசுகிசுத்தவளை கண்டு அமைச்சரின் இதயதுடிப்பு எகிறியது !



" டேய் ! நீ கீழ பார்ல இரு... கையில செல்போனை வச்சிக்க... நான் பாப்பாகிட்ட பேசிட்டு கூப்பிடறேன்... "


தனது தொப்பையை ஒரு கையாலும் மீசையை மறுகையாலும் தடவிகொண்டே  தொப்பை தொண்டரடிபொடியை விரட்டினார் அமைச்சர் !


" டேய்... இரு ! இரு ! இந்த பெட்டியை எடுத்துக்கிட்டு போயிடு... இல்ல ! வேணாம் ! பாருல வச்சுக்க வேணாம் ! "


உஷாராக ஆரம்பித்து படு உஷாராக முடித்தார் அமைச்சர் !


" ம்... இப்ப சொல்லும்மா ! "


" அது வந்து சார்... ‍ஹய்யோ ! என்ன சார் இது ? விஸ்கியை சோடாவுல கலந்து... நானே ரா தான் சார் ! "


அமைச்சரின் முகத்துக்கு நேராக அலைபாய்ந்த அவளின் கூந்தல் மணத்திலும், பெர்ப்ப்யூமிலும் அவரின் ரத்தத்தில் ஒரு பெக் கூடியது ! அவளோ உரிமையாய் அவரின் கிளாசில் ஸ்காட்சை தாராளமாய் கவிழ்த்துவிட்டு பக்கத்து கிளாசில் தனக்கென கொஞ்சமே கொஞ்சம் ஊற்றிகொண்டாள் !


" ஆ‍ஹா ! இந்த காலத்து பொண்ணுங்க இருக்கீங்களே... "


முடிக்காமலேயே அவள் கொடுத்த கிளாசை தன் வாயில் கவிழ்த்துகொண்டார் அமைச்சர் !


" வா ! வா ! வந்து சீக்கிரமா வண்டில ஏறு ! "


சூட்கேசுடன் ஓடிவந்தவளை அவ‌சரப்படுத்தினான் அவன் !


" தூ... உங்கப்பன் இருக்கானே.... சரியான தூ....டா ! எங்க கிழவன் கையைபிடிச்சி இழுத்துடுவானோன்னு பயந்துட்டேன் ! அதோட... ரூமுலேருந்து வெளியே வந்தப்போ ரிசப்சன்ல போலீஸ்க்காரங்க அவரோட ரூமை விசாரிச்சிக்கிட்டிருந்தாங்க...


" அந்தாளை பார்க்க போலீஸ் வர்றது சகஜம்... அதுவும் மாச ஆரம்பம்... மாமுலுக்கா இருக்கும்...


" ஏன்டா ? என்ன இருந்தாலும் அப்பா காசையே இப்படி... "


" சும்மா இருடீ ! நல்லவாயன் சம்மாதிச்சதை நாரவாயன் திங்கறான்னு சொல்வாங்க... எங்கப்பனே ஒரு நாரவாயன்தாண்டி ! இது மாதிரி எத்தனை சூட்கேஸ் அந்தாளு பெட்ரூமுல திறக்காம கிடக்கு தெரியுமா ?... சரி ! சரி ! பிரெண்ட்ஸ் எல்லோருக்கும் போன் பண்ணி இன்னைக்கு நைட் பார்ட்டியோட ஜமாவை ஆரம்பிக்கறோம்ன்னு சொல்லு ! "


" மிஸ்டர்... அந்த பெட்டியை கொடுத்துட்டு எங்ககூட வர்றீங்களா ப்ளீஸ் ! "


" யோவ் ? யாருய்யா நீ ? நான் யாருன்னு தெரியுமா ? "


" தெரிஞ்சுதான் பேசறேன் தம்பி ! நான்... லஞ்ச ஒழிப்பு துறை... "


புன்சிரிப்போடு தன் அடையாள அட்டையை காட்டினார் நான்கைந்து பேர் புடைசூழ நின்றிருந்த மனிதர் !


" ஏய்... நீ எங்கம்மா ஓட பார்க்குற ? "


சட்டென ஓட யத்தணைத்த இளம்பெண்ணை பாய்ந்து பிடித்தார் மப்டியில் இருந்த பெண் போலீஸ் அதிகாரி !


ஞ்சம் வங்கிய அமைச்சர் மதுபோதையில் கைது செய்யப்பட்டார் ! லஞ்ச பணத்துடன் தப்பிக்க முயன்ற அமைச்சரின் மகனும் இளம் அழகியும் பிடிபட்டனர் !!


மறுநாள் தினசரிகளின் தலைப்பு செய்தியில் அச்சிடப்பட்டிருந்த புகைப்படங்களில் மட்டுமே அமைச்சர் சிரித்துகொண்டிருந்தார் !





இப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.